Posted by: Madras Medical College on: July 16, 2009
சென்னை: முதல்வரின் மேல் நம்பிக்கை வைத்து மருத்துவ பயிற்சி மாணவர்கள் தங்களது போராட்டத்தை நிபந்தனையின்றி வாபஸ் பெற்றிருப்பதாக, சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
மருத்துவ பயிற்சி மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு, சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வத்தை நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது, சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ், சென்னை மருத்துவக் கல்லூரி டீன் மோகனசுந்தரம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். மாணவர்கள் சில கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்தனர்.
இவற்றை பரிசீலிப்பதாகவும், முதல்வரை நேரில் சந்தித்துப் பேச நேரம் பெற்றுத் தருவதாகவும் அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதன்பின் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது: மருத்துவ பயிற்சி மாணவர்கள், முதுகலை மருத்துவ மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தங்களுக்கான உதவித் தொகையை உயர்த்துவது தொடர்பாக போராட்டங்கள் நடத்தினர்.
போராட்டத்தைத் துவக்கியதுமே, இம்மாதம் 3ம் தேதி, உதவித் தொகையை உயர்த்தி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். அதன் பின்பும், தொடர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தைக் கைவிடும்படி சட்டசபையில் முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, தங்களது போராட்டத்தை கைவிடுவதாக, எழுத்துபூர்வமாக நேரில் வந்து மாணவர்கள் அளித்தனர். எவ்வித நிபந்தனையும் இன்றி போராட்டத்தைக் கைவிடுவதாக தெரிவித்தள்ளனர். உடனடியாக பணிக்கும் திரும்பியுள்ளனர்.
சில கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். முதல்வரை சந்திக்க வேண்டுமென்றும் தேதி கேட்டனர். அவர்களது கோரிக்கைகள் குறித்து முதல்வர் முடிவு செய்வார். இந்த அரசு மற்றும் முதல்வர் கருணாநிதி மீது நம்பிக்கை வைத்து போராட்டத்தை கைவிட்டுள்ளனர். முதல்வர் நல்லது செய்வார் என்று நம்பி போராட்டத்தை கைவிட்ட மாணவர்களுக்கு நன்றி. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இது குறித்து, பயிற்சி டாக்டர்கள் கூறியதாவது: எங்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால், போராட்டத்தைதை தீவிரப்படுத்தும் நிலை ஏற்பட்டது. அரசிடம் சில கோரிக்கைகளை வலியுறுத்தி, போராடுபவர்களும், அரசும் பேசி ஒரு சுமூகத் தீர்வை எட்டியப் பிறகு, போராட்டத்தைத் திரும்ப பெறுவது தான் நடைமுறை. இருப்பினும் எங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று முதல்வர், பேச்சுவார்த்தைக்கு அழைப்பார் என நம்பி, நேற்று சுகாதாரத் துறை அமைச்சரைச் சந்தித்தோம். எங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில்,முதல்வர் இன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் என அமைச்சர் தெரிவித்தார். எனவே, முதல்வர் மீது நம்பிக்கை வைத்து எங்கள் போராட்டங்களை வாபஸ் பெற்றுள்ளோம். பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள முதல்வருக்கு எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். இவ்வாறு பயிற்சி டாக்டர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்
Recent Comments